ஜே.வி.நாதன் சிதம்பரத்தில் பிறந்தவர்.கடந்த 37 ஆண்டுகளாக வேலூரில் வாசம்.இவருடைய மனைவி ஜெயா,வேலூர் டி.கே.எம்.மகளிர் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவர்களுக்கு ஒரு மகன்,ஒரு மகள்.
இவர் எழுதிய சுமார் 400 சிறுகதைகள் பல பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன.சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனை பரிசை மூன்று முறை பெற்றுள்ளார்.இவருடைய 70 சிறுகதைகள் கன்னடம்,தெலுங்கு,சமஸ்கிருதம் ஆகிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.ஜூனியர் விகடன் இதழில் பல நூறு கட்டுரைகள் எழுதியுள்ளார்.ஜூ.வி.யில் வெளிவந்த ‘முகமூடி இல்லாத கொள்ளைக்காரர்கள்!’ என்ற இவருடைய கட்டுரை தமிழில் வெளிவந்த மிகச் சிறந்த புலனாய்வுக் கட்டுரை என்று சென்னை விஜில் அமைப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கப்பதக்கம் உள்ளிட்ட பாஞ்ச ஜன்யம் என்ற விருதைப் பெற்றது.
எழுத்தாளர் ஜெயகாந்தன் முன்னுரையோடு வேட்டை என்ற சிறுகதைத் தொகுப்பு,விகடன் நிறுவன வெளியீடுகளாக அதிதி சிறுகதைத் தொகுதி,ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள் மற்றும் சிறுகதைத் திருமூலர் மௌனியின் மறுபக்கம் ஆகிய இவரது நூல்கள் வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ளன.