செய்யாத குற்றத்திற்காகச் சிறைத்தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை. சாகசத் தன்மை கொண்டவை. போலீசில் பிடிப்பட்டதுமே உண்மைகளை ஒப்புக் கொண்டுவிடுகிற இவர் தன் மீதான வழக்குகளுக்கு வழக்கறிஞர்களை நியமித்துக் கொள்ளாமல் தானாகவே வாதாடுவார். இவரது குறுக்கு விசாரணைகள், போலீஸ் அதிகாரிகளும் நீதிபதிகளும் பயப்படுமளவுக்கு அமைந்திருக்கும். ஒரு புறம் மனிதத்தன்மையற்றதாக இருக்கும் இவரது செயல்பாடுகளினுள் ஏழைகள் மீதான உள்ளார்ந்த பரிவும் இடைகலந்திருக்கும்.