இவன் தான் பாலா
என் பட நாயகர்களைப்போலவே நானும் எளியவன். கரடுமுரடான வாழ்க்கை பார்த்து வளர்ந்தவன். அடையாளம் காணப்படாமலேயே அழிந்துபோயிருக்க
வேண்டியவன். மூன்று மணி நேரத் திரைப்படம் போல, உஙகள் முன் என் கதையையும் வைத்தேன். அவ்வளவே!.
யாரும் யாருக்கும் எதுவும் சொல்லித்தந்துவிட முடியாது. பிழைக்கக் கற்றுத்தரலாம். வாழ்வு அவரவர்களுடையதே. ‘ சுயமே சத்தியம் ‘, ’ சுயமே
உன்னதம் ‘ என்று நம்புபவன் நான். ‘ பராதீனம் ப்ராண சங்கடம்...’ யாரையும் எதற்காகவும் சார்ந்திருக்கக் கூடாது என்பது வாழ்க்கை எனக்குக்
கற்றுத்தந்த அனுபவம்.
என்னையே எடுத்துக்கொள்வோமே...
ஒரு திரைப்பட இயக்குநருக்குரிய அடிப்படை இலக்கணங்களில் அடங்க மாட்டேன். இலக்கியப் பரிச்சயம் பெரிதாகக் கிடையாது. உலகத் திரைப்படங்கள்
ஒடி ஓடிப் பார்த்ததும் கிடையாது. மொத்தத்தில், பெரிய ஞானஸ்தனும் இல்லை. ஆனால், எனக்குத் தெரிந்ததெல்லாம் வாழ்க்கை....
அது வழி நெடுகிலும் அள்ளி அள்ளித் தந்த அனுபவங்கள்.